கோலாலம்பூர், நவ. 27-
மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தில் பயிற்சியில் பங்கேற்ற கேடட் பயிற்சியாளர்களை பகடிவதை செய்து, அராஜகம் புரிந்த குற்றத்திற்காக அந்தப் பல்கலைக்கழகத்தின் 5 கேடட் பயிற்றுநர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டதுடன் அவர்களுக்கான பணி ஒப்பந்தம் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
சம்பந்தப்பட்ட ஐவரும், அதிகாரிகளாக பணியாற்றுவதற்கு முன்னதாக, கேடட் பயிற்சியை மேற்கொண்டது, அதிகாரிகளுக்கான பயிற்சியைப் பெற்றது தொடர்பில் அவர்களுக்காக அரசாங்கம் செலவிட்டத் தொகையை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தற்காப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டீன் தெரிவித்தார்.
தற்காப்பு அமைச்சு மற்றும் சட்டத்துறை அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, அவர்கள் எதிர்நோக்கியுள்ள மற்ற நடவடிக்கைகளுக்கு பொருந்தாது என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
பயிற்சி மாணவரின் நெஞ்சுப்பகுதியில் ஸ்திரீ பெட்டியினால் சூடு வைத்தது உட்பட பயிற்சி மாணவர்களுக்கு எதிராக பல்வேறு அராஜகங்களை புரிந்ததாக அந்த ஐவருக்கு எதிரான குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது








