கோலாலம்பூர், ஜூலை.16-
பொதுவாகப் பெரியவர்களிடம் மட்டுமே காணப்படும் வகை-2 நீரிழிவு நோய், தற்போது 14 வயது சிறார்களிடமும் கண்டறியப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவர் வெளியிட்டுள்ள தகவலில், இளம் வயதினரிடையே தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவது கவலைக்குரிய போக்காக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக இரத்தச் சர்க்கரை போன்ற பிரச்சினைகள் இளைஞர்கள் மற்றும் சிறார்களிடையே அதிகரித்து வருவதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், NHSI என்ற தேசிய சுகாதார பரிசோதனை முன்முயற்சி திட்டத்தின் தரவுகளின்படி, தொற்றாத நோய்கள் மற்றும் அவற்றுக்கான ஆபத்து காரணிகள் இளம் வயதினரிடையே தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் ஸுல்கிஃப்லி அஹ்மாட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
NHSI திட்டத்தின் கீழ் பரிசோதிக்கப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 751 பேர், 3.4 விழுக்காடு அதிக இரத்தச் சர்க்கரை அளவுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 9,000-க்கும் மேற்பட்டோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், 30 ஆயிரத்து 170 பேருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதும் பரிசோதனையில் தெரிய வந்ததாகவும் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.








