கோலாலம்பூர், நவ. 13-
தனது மூன்று வயது மகனை பூனைக்கூண்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த குற்றத்திற்காக மாது ஒருவருக்கும், அவரின் தோழிக்கும் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
ஓர் உணவகப் பணியாளரான 20 வயது மாதுவும், அவரின் 35 வயது தோழியான அடிபா முகமட் ஸைனி என்பவரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி சித்தி ஷாகிரா மொக்தார் இருவருக்கும் இத்தண்டனையை விதித்தார்.
இவ்விருவரும் கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸ், தாமான் டானாவ் டேசாவில் உள்ள தங்களின் அடுக்குமாடி வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த இரண்டுப் பெண்களின் செயலானது, வளரும் பருவதில் உள்ள அந்த மூன்று சிறுவனின் மன வளர்ச்சியை குன்றச்செய்யும் என்று நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
தனது மற்றொரு மகனை ஒட்டும் நாடாவான செல்போன் டேப்பினால் உடல் முழுவதும் சுற்றி, கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக அந்த மாதுவிற்கு நீதிபதி மேலும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்.








