கோலாலம்பூர், ஆகஸ்ட் 27-
தமது உடலில் இந்தியர் ரத்தம் ஓடுகிறது என்பதை ஒப்புக்கொள்வதில் தாம் என்றுமே வெட்கப்பட்டது கிடையாது என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று சாட்சியம் அளித்தார்.
தமது உடலில் இந்தியர் ரத்தம் ஓடுகிறது என்பதற்காக தாம் ஒரு மலாய்க்காரர் அல்ல என்று அர்த்தமாகாது என்பதையும் துன் மகாதீர் தெளிவுபடுத்தினார்.
தமது தந்தை மலேசியாவில் பிறந்தவர் என்றும் ஒரு மலாய்க்காரராகவே தன்னை பதிவு செய்து கொண்டவர் என்றும் துன் மகாதீர் குறிப்பிட்டார்.
அதேவேளையில் தமது தாத்தா மற்றும் பட்டானார், இந்தியா, கேரளாவைச் சேர்ந்தவர்களா? என்பது தமக்கு உறுதியாக தெரியாது என்றும், இவ்விவகாரம் குறித்து தமது குடும்ப உறுப்பினர்கள் மிக கடுமையாக விவாதித்தது கிடையாது என்றும் துன் மகாதீர் தெரிவித்தார்.
துன் மகாதீரின் முழு பெயர் மகாதீர் இஸ்கந்தர் குட்டி என்றும் அவரின் பூர்வீகம் கேரளா என்றும், அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, 7 ஆண்டுகளுக்கு முன்பு கிளானா ஜெயாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்ததாக கூறப்படுகிறது.
தம்மை அவமதிக்கும் வகையில் தீயநோக்கத்துடன் அகமட் ஜாஹிட் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்று கூறி, அவருக்கு எதிராக துன் மகாதீர் தொடுத்துள்ள மானநஷ்ட வழக்கில் அந்த முன்னாள் பிரதமர் மேற்கண்டவாறு சாட்சியம் அளித்துள்ளார்.
தாம் ஒரு மலாய்க்காரராக இருக்கும் பட்சத்தில் தனது பூர்வீகத்தை தோண்டி, ஆராய்ந்து பார்க்கும் முயற்சியில் நாட்டின் துணைப்பிரதமர் ஒருவர் ஈடுபட்டுள்ளார் என்றால் இது தம்மை சீண்டிப்பார்க்கும் வேலை மட்டும் அல்ல. தம்மை அவமதிக்கும் செயலாகும் என்று துன் மகாதீர் வாதிட்டார்.








