கிளானா ஜெயா எல்ஆர்டி ரயில் சேவை இன்று காலை 10.25 மணிக்கு வழக்கநிலைக்குத் திரும்பியது.
காலை 9.28 மணியளவில் யுனிவர்சிட்டி நிலையத்தில் ஏற்பட்ட மின்சாரத் தடையால், தாமான் ஜெயா மற்றும் யுனிவர்சிட்டி நிலையங்களுக்கு இடையே ஒரு ரயில் நடுவழியில் சிக்கியது.
ரயிலில் இருந்த பயணிகள் மீட்பு ரயிலுக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டு, அருகிலுள்ள நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ரேப்பிட் கேஎல் தெரிவித்துள்ளது.
தற்காலிக மாற்று ரயில் சேவைகள் இயக்கப்பட்டு, தொழில்நுட்பக் குழுவினர் பாதிக்கப்பட்ட மின்சார அமைப்பை ஆய்வு செய்து பழுதுபார்த்தனர்.
இந்தச் சம்பவத்தில் பயணிகள் எவரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ரயில் சேவையிலிருந்து அகற்றப்பட்டு, மின்தடைக்கான காரணத்தைக் கண்டறிய முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.








