லிப்பிஸ், ஜுன் 28-
மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் குழு, பகாங், தேசிய பூங்காவில் உள்ள குனுங் தஹான் சிகரத்தில் ஏறும் முயற்சி சோகத்தில் முடிந்தது. அந்த மாணவர் குழுவைச் சேர்ந்த மாணவி ஒருவரை நச்சுத்தன்மை வாய்ந்த விரியன் பாம்பு தீண்டியதால் மாணவர்கள் சோகத்தில் மூழ்கினர்.
லிப்பிஸ் Kem Botak முகாமிற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. 20 வயது சிதி நுரக்கிலா என்ற அந்த பல்கலைக்கழக மாணவி, குளித்துக்கொண்டு இருந்த போது அவளை விரியன் பாம்புத் தீண்டியதாக லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் இஸ்மாயில் மான் தெரிவித்தார்.
மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பங்கேற்பாளர்கள், அந்த மாணவிக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். அந்த மாணவர் குழு தங்கியிருந்த இடத்திற்கும் பிரதான சாலைக்கும் கிட்டத்தட்ட 10 மணி நேர பயணமாகும்.
இரவு நேரம் ஆனதால் வேறு வழியின்றி அந்த மாணவியை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் ஹெலிகாப்டர் சேவையைப் பயன்படுத்தினர்.
அந்த மாணவி இன்று காலை 10.20 மணியளவில் குவாலா லிபிஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கண்காணிப்பாளர் இஸ்மாயில் தெரிவித்தார்.








