சிம்பாங் அம்பாட் ஊத்தான் மெலிந்தாங்கில் புதிய ஆலயம் அமைக்க, பேராக் மாநில அரசு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது.
அந்நிலமானது முறையே அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டதுடன் , அந்நிலத்தில் 30 லட்சம் ரிங்கிட் செலவில் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆலயத் தலைவர் ஆ. கணேசன் கூறினார்.
அதேவேளையில், ஆலய வளாகத்தில் சிவன் சன்னதியும், 1000 பேர் அமரக் கூடிய மண்டபமும் , அலுவலகம் மற்றும் அர்ச்சகர்கள் தங்கும் இடமும் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த பொதுத் தேர்தலில், பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹித் ஹமிதி, இந்த புதிய ஆலயத்தை நிர்மாணிக்க வழி வகை செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
அது தொடர்பாக அவரையும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசனையும் சந்தித்து நிதி கோரிகை முன் வைக்கப்படும் என்றும் கணேசன் குறிப்பிட்டார்.
இந்நிலையில்,, அந்த இயக்கத்தின் வழி இந்த விருந்தை முன்னின்று நடத்திய டத்தோ தயாளன்பிள்ளை,வாசு,கண்ணா,மோகன்,எம்.ஜி.பன்னிர்செல்வம்,தனராஜ்,விஷ்ணு தரன் ஆகியோர் உட்பட ஊத்தான் மெலிந்தாங் சமூக மேம்பாட்டு இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்களுக்கு கணேசன் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்த ஆலயத்தை நிர்மாணிக்க நிதி திரட்ட ஊத்தான் மெலிந்தாங் சமுக மேம்பாட்டு இயக்கம் பெரும் முயற்சி மேற்கொண்டு, ஊத்தான் மெலிந்தாங்கில் உள்ள மண்டபத்தில் சிறப்பு விருந்தை ஏற்பாடு செய்தது.
அந்நிகழ்ச்சியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
அது குறித்து அந்த இயக்கத்தின் செயலாளர் எம்ஜி பன்னீர் செல்வம் கூறுகையில், இந்த ஆலயத்தின் பணிகள் நிறைவடையும் வரையில், அதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் தங்களது இயக்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் 22 விழுக்காட்டு இந்தியர்கள் வாழ்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த ஆலயமானது நிர்மாணிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.









