மலேசியாவின் பிரதமர் பதவி என்பது மலாய்க்காரர்களுக்கு மட்டுமே உரியது, மலாய்க்காரர்கள் மட்டுமே பிரதமராக வர முடியும் என்பதை வரையறுப்பதற்கு அரசியலமைப்புச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருமாறு பெரிக்காத்தான் நேஷனல் இன்று சவால் விடுத்துள்ளது.
பெரும்பான்மை மலாய்க்காரர்களின் நலனை பேணுவதற்கு அப்படியொரு சட்டத்திருத்தத்தை அரசாங்கம் கொண்டு வருமானால் அதற்கு பெரிக்காத்தான் நேஷனல் முழுமையாக ஆதரிக்கும் என்று மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அஹ்மாட் ஃபைசால் வான் அஹ்மாட் கமல் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மலாய்க்காரர்கள் மட்டுமே பிரதமர் பதவியை வகிக்க முடியும் என்ற சட்டத்திருத்தத்தை கொண்டு வருவது மூலமே மலாய்க்கார்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும் என்று வான் அஹ்மாட் ஃபைஷால் குறிப்பிட்டார்.
மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் நாட்டின் பிரதமராக வர முடியும் என்று டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கருத்து தெரிவித்து இருப்பது மூலம் மலாய்க்கார்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மலாய்க்காரர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை முன்வைப்பதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் இப்படியொரு சட்டத்திருத்தம் அவசியமாகும் என்று வான் அஹ்மாட் ஃபைசால் குறிப்பிட்டுள்ளார்.







