சிரம்பானில் உள்ள பள்ளி மாணவர்களை குண்டர் கும்பலில் சேருமாறு தூண்டியதாகக் கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.10 மணியளவில், சிரம்பான், கார்டன் ஹோம்ஸ் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் முன்புறம் அந்த இளைஞர் பிடிபட்டார். நெகிரி செம்பிலான் குண்டர் கும்பல்கள் துடைத்தொழிப்பு போலீஸ் பிரிவான D7 ( டி. செவன் ) இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
கைது செய்யப்பட்ட நபருக்கு ஏற்கனவே நான்கு குற்றப் பின்னணிகள் உள்ளன. 1966-ஆம் ஆண்டு குண்டர் கும்பல் சட்டம், 45- ஆவது பிரிவின் கீழ் விசாரணைக்காக அவர் மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் அஸஹார் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 12-ஆம் தேதி, சிரம்பானில் 6-ஆம் ஆண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட ஒரு மோதல் குறித்து போலீசாருக்கு புகார் கிடைத்தது. இது குறித்து விசாரித்தபோது, சில வெளியார் கும்பல்கள் மாணவர்களைச் சட்டவிரோத குழுக்களில் சேரத் தூண்டுவது தெரியவந்தது.
இந்த விவகாரம் மாணவர்கள் மற்றும் சமூகத்தினிடையே பரவாமல் தடுக்கவும், இதில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறியவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அஸஹார் மேலும் கூறினார்.








