பினாங்கு, பத்து பெரிங்கியிலுள்ள கம்போங் டின் மன்போவில் இன்று காலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 11 ஈரடுக்கு வீடுகள் சுமார் 80 விழுக்காடு தீக்கிரையாகின.
காலை 11.29 மணிக்குத் தகவல் கிடைக்கப் பெற்றதும், பாகான் ஜெர்மால், தெலுக் பஹாங் உள்ளிட்ட நிலையங்களைச் சேர்ந்த 23 தீயணைப்பு வீரர்கள் நான்கு வாகனங்களில் விரைந்து வந்து மதியம் 12.21 மணியளவில் தீயைக் கட்டுப்படுத்தினர்.
சம்பவ இடத்திற்குச் செல்லும் பாதை மிகவும் குறுகலாக இருந்ததாலும், நீர் அழுத்தம் குறைவாக இருந்ததாலும் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டதாகத் தீயணைப்பு மீட்புத் துறையின் பினாங்கு மாநில உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது அந்தப் பகுதியில் 'ஓவர்ஹால்' பணிகள் நடைபெற்று வரும் வேளையில், தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர் என்று ஜான் சகுன் மேலும் தெரிவித்தார்.








