கோலாலம்பூர், ஜனவரி.28-
மும்பையில் கைது செய்யப்பட்ட ‘கேப்டன் பிரபா’ கும்பலைச் சேர்ந்த மூன்று தேடப்பட்டு வரும் குற்றவாளிகளும், இன்று புதன்கிழமை அதிகாலை 7 மணியளவில் மும்பையில் இருந்து கோலாலம்பூருக்கு உச்சக் கட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொண்டு வரப்பட்டனர்.
இந்திய நேரப்படி அதிகாலை 1 மணியளவில் மும்பையில் இருந்து வர்த்தக விமானத்தின் மூலம் அவர்கள் மூவரும் மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், கேஎல்ஐஏ-விலிருந்து சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் அவர்கள், ஆவணப் பணிகள் முடிக்கப்பட்ட பின்னர், சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர்.
30 வயது மதிக்கத்தக்க இந்த மூவர் மீதும் இண்டர்போல் எனும் அனைத்துலக போலீசாரின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மான்செஸ்டர் விமான நிலையத்தில் அவர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் புறப்பட்ட இடமான மும்பைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
நவீந்திரன் ராஜ் குமரேசன், ஸ்ரீதரன் சுப்ரமணியம் மற்றும் பிரதீப் குமார் செல்வராஜ் என்ற அந்த மூவரும் 'கேப்டன் பிரபா' கும்பலின் முக்கியத் தலைவர்கள் என்று கூறப்படுகின்றது.
இவர்கள் கிள்ளான் மற்றும் பந்திங் பகுதிகளில் நடந்த கொலை, தீவைப்பு மற்றும் ஆயுதங்களுடன் கூடிய தாக்குதல் போன்ற உயர்மட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என போலீஸ் தகவல்கள் கூறுகின்றன.








