கிள்ளான், மார்ச்.06-
கிள்ளான், காப்பார், தாமான் ஶ்ரீ காப்பாரில் நேற்று நிகழ்ந்த துப்பாக்கிக் சூடு சம்பவம் மற்றும் அந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக நம்பப்படும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை தனது Four Wheel Drive வாகனத்தினால் மோதி, விபத்தை ஏற்படுத்திய நபர், கைது செய்யப்பட்டு, 5 நாள் நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஒரு லோரி ஓட்டுநரை நோக்கி துப்பாக்கிச் சூட்டு பிரயோகம் நடத்திய மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், Four Wheel Drive வாகனத்தினால் மோதப்பட்டதால் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விசாரணைக்கு ஏதுவாக 49 வயது வாகன ஓட்டுநர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் தெரிவித்தார்.
எனினும் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களுக்கும், அவர்களை மோதித் தள்ளிய நபருக்கும் எவ்வித அறிமுகமும் இல்லை என்று விஜயராவ் விளக்கினார்.
சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று வியாழக்கிழமை காலை 9.51 மணியளவில் காப்பார், காம்போங் பிரபாட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், Four Wheel Drive வாகன ஓட்டுநரின் பணியாளரான லோரி ஓட்டுநர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, Four Wheel Drive வாகன ஓட்டுநர், இருவர் பயணித்த அந்த மோட்டார் சைக்கிளைத் துரத்திக் கொண்டுச் சென்றுள்ளார். கம்போங் பிரப்பாட் அருகில் ஜாலான் கெரெத்தாபி லாமா பகுதியில், மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்தவர் துப்பாக்கியைப் போன்ற ஒரு பொருளைக் காட்டி மிரட்டிய போது, Four Wheel Drive வாகன ஓட்டுநர் அவர்களை வாகனத்தினால் மோதி கீழே தள்ளியுள்ளார். இதில் மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில், பின்னால் அமர்ந்திருந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மூவருமே பலத்த குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. உயிரிழந்த நபர், கொலை, கொலை முயற்சி, கூட்டுக் கொள்ளை என 23 குற்றப் பதிவுகள் உள்ளன. காயமடைந்தவர், 10 குற்றப் பதிவுகள் உள்ளன. மேலும் இவர் தேடப்படும் குற்றவாளியாவார்.
இருவரை மோதித் தள்ளிய வாகன ஓட்டுநர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றப் பதிவுகள் உள்ளன. இவ்வழக்கு தற்போது குற்றவியல் சட்டம் 302-ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.








