அலோர் ஸ்டார், மார்ச்.29-
கெடா மாநிலத்தின் கோத்தா ஸ்டார், பெண்டாங் ஆகிய மாவட்டங்களில் வெப்ப நிலை தொடர்ந்து இரண்டாம் நிலையை எட்டியுள்ளதால், மாணவர்களின் நலன் கருதி இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரை 206 பள்ளிகளைச் சேர்ந்த 86 ஆயிரத்து 30 மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்கும் முறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கெடா மாநிலக் கல்வி இலாக்காவின் இயக்குநர் அப்துல் ரஹிம் மாட் தெரிவித்தார். உச்சக் கட்ட வெயில் நேரமான நண்பகல் வேளையில் மாணவர்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்கவும், வெப்பத்தினால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் அவர் தெரிவித்துள்ளார். வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப நிலை குறையவில்லை என்றால் இந்த இணைய வகுப்பு முறை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அப்துல் ரஹிம் மாட் மேலும் கூறினார்.








