கோலாலம்பூர், ஆகஸ்ட்.21-
கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கி எட்டு நாட்கள் நடைபெற்ற காரசாரமான விவாதங்களுக்குப் பிறகு 13 ஆவது மலேசியத் திட்டம் மீதான மசோதா மக்களவையில் பெரும்பான்மை குரல் வாக்கெடுப்பின் மூலம் இன்று நிறைவேற்றப்பட்டது.
சமூகவியல், பொருளியல், உயர் தொழில்நுட்பம், வீடமைப்பு, வேலை வாய்ப்பு, உயர் வருமானம் உட்பட பல்வேறு துறைகளை உள்ளடக்கி மலேசியாவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்லும் பிரதான 13 ஆவது மலேசிய த் திட்டம் வெற்றிகரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
2026 முதல் 2030 வரை உள்ளடக்கிய 13 ஆவது மலேசியத் திட்ட மசோதா நிறைவேற்றம் மீதான இறுதி அமர்வு விவாதம் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது.
கிராமப்புற மேம்பாட்டில் உள்ள இடைவெளிகள், நிதி ஒதுக்கீடுகளில் வெளிப்படைத்தன்மை, செயற்கை நுண்ணறிவு மற்றும் திறன் மேம்பாடு குறித்த அச்சங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிபடுத்தும் களமாக 13 ஆவது மலேசியத் திட்ட மசோதா விவாதம் அமைந்தது.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஜுலை 31 ஆம் தேதி மக்களவையில் 13 ஆவது மலேசியத் திட்டம் மீதான மசோதாவைத் தாக்கல் செய்தார். ஒட்டுமொத்த வளர்ச்சி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, டிஜிட்டல் மயமாக்கல், கல்வி, சுகாதாரத்துறை முதலியவற்றை வலுப்படுத்துவதாக அவர் உரை அமைந்திருந்தது.








