கம்போங் பாரு, ஜூன் 22-
சுங்கை பூலோ, கம்போங் பாரு-வில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தளவாடப் பொருட்கள் தயாரிக்கும் இரண்டு தொழிற்சாலைகள் அழிந்தன.
இத்தீ சம்பவம் தொடர்பாக அதிகாலை 5.09 மணியளவில் தீயணைப்பு, மீட்புப்படையின் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக அதன் சிலாங்கூர் மாநில இயக்குநர் வான் முஹம்மது ரஸாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
சுங்கை பூலோ, புக்கிட் ஜெலுத்தோங், டாமன்சாரா, ரவாங், கிளாங் உத்தாரா, சுபாங் ஜெயா ஆகிய நிலையங்களிலிருந்து 35 வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.
நாளாபுறமும் கொழுந்து விட்டு எரிந்த தீயை முழுமையாக அணைக்கவும், தீ மற்ற கட்டங்களுக்கு பரவாமல் தடுக்கவும் முழு வீச்சில் ஈடுபட்ட வீரர்கள் காலை 6.17 மணியளவில் தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர் என்று வான் முஹம்மது ரஸாலி தெரிவித்தார்.
தளவாடங்கள் தயாரிப்புக்குரிய தொழிற்சாலை கட்டடங்களில் இரண்டு கட்டடங்கள் 90 விழுக்காடு அழிந்ததாக அவர் குறிப்பிட்டார்.








