கோலாலம்பூர், பிப்ரவரி.14-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி, நிதிச் சேவை நிறுவனம் ஒன்றில், 17.7 மில்லியன் ரிங்கிட் பங்குகளை வைத்திருப்பதாகக் கட்டுரை வெளியிட்ட ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் மீது புக்கிட் அமானின் இரகசிய குற்றப் புலனாய்வுப் பிரிவு அவதூறு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இணையத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலும், விசாரணை நடைபெற்று வருவதாக புக்கிட் அமான் சிஐடி தலைவர் எம் குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தனக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அஸாம் பாக்கி, ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு எதிராக 100 மில்லியன் ரிங்கிட் மானநஷ்ட வழக்குத் தொடுத்துள்ளார்.
இந்நிலையில், ப்ளூம்பெர்க் நிறுவனம் தாங்கள் வெளியிட்ட செய்தியைத் தற்காத்திருப்பதோடு, சர்ச்சைக்குரிய பல தொழிலதிபர்களுடன் அஸாம் பாக்கிக்குத் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, அஸாம் பாக்கி மீதான பங்குரிமை தொடர்பான புகார்களை விசாரிக்க அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷாம்சுல் அஸ்ரி அபு பாக்கார் தலைமையில் ஒரு சிறப்புப் பணிக் குழுவை அரசாங்கம் அமைக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.








