சிலாங்கூர் மாநில அளவிலான வைசாகி திருநாள் கொண்டாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள லாமன் எம்பிபிஜே வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு இந்நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இவ்விழாவில் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத் தலைவர் டத்தோ ஹாஜி முகமது ஜாரி சாமிங்கோன் , சிலாங்கூர் மாநில குருத்வாரா அமைப்பின் பிரதிநிதி மோகன் சிங் மற்றும் மாநிலத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சமூக ஒற்றுமையை நிலைநாட்டவும், சீக்கிய சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மற்ற இனத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்த மாநில அளவிலான விழா ஒரு பாலமாக அமைந்தது.
மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை நடைபெற்ற இந்த விழாவில் பங்ரா நடனம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் உணவு உபசரிப்புகள் இடம் பெற்றன.
இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநிலத்தை சேர்ந்த 13 குத்வாரா ஆலயங்களுக்கு மாநில அரசாங்கம் 95 ஆயிரத்து 200 ரிங்கிட் வழங்கியது. அத்துடன் பெட்டாலிங் ஜெயா டின் குத்வாரா சங்கத்திற்கு கூடுதல் சிறப்பு நிதியாக 50 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டதாக நிகழ்விற்கு தலைமையேற்ற ஆட்சிக்குழு உறுப்பினர் பாபாராய்டு தெரிவித்தார்.
இந்த வைசாகி விழாவில் மலாய்க்காரர்கள் உட்பட பல்லின மக்கள் கலந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத் தலைவர் தலைவர் டத்தோ முகமது ஜாரி சாமிங்கோன் குறிப்பிட்டார்.
இந்த வருடாந்திர வைசாகி விழாவில் சீக்கிய சமூகத்தினர் திரளாக கலந்து கொண்டு இருப்பது அவர்களுக்கு இடையிலான ஒற்றுமையை புலப்படுத்தியது.










