பினாங்கு மாநிலம் முழுவதும் 42 வீடுபுகுந்து கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 'நிழல் கும்பலைச்' சேர்ந்த ஐந்து பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இக்கும்பல் மூலம் இதுவரை சுமார் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் திருடப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை சி.ஐ.டி. இயக்குநர் டத்தோஸ்ரீ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
புக்கிட் அமான் மற்றும் பினாங்கு குற்றப்புலனாய்வுத் துறையினர் இணைந்து நடத்திய இந்தச் சிறப்பு நடவடிக்கையில், 27 வயது இளைஞர் தலைமையிலான இந்த எட்டு பேர் கொண்ட கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் கைது செய்யப்பட்ட 5 பேர் 'சொஸ்மா' சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 3 உறுப்பினர்கள் ஏற்கனவே வேறு குற்றங்களுக்காகச் சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை பட்டர்வொர்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்று டத்தோஸ்ரீ குமார் குறிப்பிட்டார்.
இக்கும்பல் பாதுகாப்பு வசதிகள் கொண்ட வீடுகள் மற்றும் சாதாரண குடியிருப்புகளைக் குறிவைத்து, நகை, பணம் மற்றும் மின்னணுப் பொருட்களைக் கொள்ளையடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இந்த அதிரடி கைதின் மூலம் பினாங்கில் நிலவி வந்த 42 முக்கிய கொள்ளை வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ எம். குமார் தெரிவித்துள்ளார்.








