பேரா, கம்போங் காஜாவில் ஆடவர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, முன்னாள் காதலியைப் பாலியல் வன்புணர்ச்சி செய்த 30 வயது சந்தேக நபரைப் போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அல்வி ஜைனல் அபிதின் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை, சந்தேக நபர் தனது 25 வயது முன்னாள் காதலியைச் சந்தித்துப் பேச வயல் பகுதிக்கு அழைத்துள்ளார். அங்கு காரினுள்ளேயே பெண்ணை மிரட்டிப் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். மறுநாள் அதிகாலை, அப்பெண்ணின் தற்போதைய காதலன் அங்கு வந்து சந்தேக நபரின் காரை வழிமறித்தபோது, இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் சந்தேக நபர் அந்த ஆடவரை வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, பாதிக்கப்பட்டவரின் காரிலேயே தப்பியோடினார்.
உடனடி நடவடிக்கையாக, பேரா மற்றும் பெர்லிஸ் குற்றப் புலனாய்வுத் துறையினர் இணைந்து நேற்று மாலை 3.45 மணியளவில் பெர்லிஸ் சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் சந்தேக நபரை அதிரடியாகக் கைது செய்தாக ஈப்போவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ அல்வி ஜைனல் இதனை தெரிவித்தார்.
சந்தேக நபர் மீது கொலை குற்றச்சாட்டு மற்றும் பாலியல் வன்புணர்ச்சி ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை செய்வதற்கு ஏதுவாக அவரை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியை பெற்று இருப்பதாக டத்தோ அல்வி ஜைனல் தெரிவித்தார்.









