கோலாலம்பூர், மார்ச்.02-
நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சித் தரப்புகள் தங்களது அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, ஈரான் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் ஆதரவாக ஓரணியில் திரண்டுள்ளனர்.
ஈரான் மீது இஸ்ரேலிய சியோனிச ஆட்சி மற்றும் அமெரிக்கா நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்து, சர்வதேச அளவில் மிக விரைவாகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய நாடாளுமன்றங்களில் ஒன்றாக மலேசிய நாடாளுமன்றம் திகழ்கிறது.
மக்களவையில் இது தொடர்பான தீர்மானத்தின் மீது உரையாற்றிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த அபூர்வமான ஒற்றுமையை வெகுவாகப் பாராட்டினார்.
ஒரு நாட்டின் கண்ணியம், இறையாண்மை மற்றும் சுதந்திரம் போன்ற விவகாரங்களில் மலேசியா ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது என்பதற்கான தெளிவான வெளிப்பாடு இதுவென்று பிரதமர் விவரித்தார்.








