கோலாலம்பூர், ஏப்ரல்.11-
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ள சூழலில், பொதுமக்கள் போக்குவரத்துத் துறை அலுவலகங்களுக்கு நேரில் வருவதைத் தவிர்த்து, இணைய வழிச் சேவைகளைப் பயன்படுத்துமாறு அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி கேட்டுக் கொண்டுள்ளார். மோட்டார் வாகன வரி புதுப்பித்தல், உரிமையாளர் மாற்றம் உள்ளிட்ட 49 வகையான சேவைகளை JPJ அதிகாரப்பூர்வ இணையத்தளம் வாயிலாகவோ அல்லது 'MyJPJ' செயலி வாயிலாகவோ எங்கிருந்து வேண்டுமானாலும் எளிதாக மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த டிஜிட்டல் முறை, நேரத்தையும் எரிபொருள் செலவையும் மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அரசின் சேவைகளை மிகவும் வேகமாகவும் திறமையாகவும் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








