கோலாலம்பூர், பிப்ரவரி.15-
கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற அமைதிப் பேரணி எவ்வித அசம்பாவிதங்களுமின்றி முடிவடைந்த போதிலும், அதில் நிகழ்த்தப்பட்ட உரைகளையும் உள்ளடக்கங்களையும் காவற்படை முழுமையாக ஆய்வு செய்ய உள்ளது. இனம், மதம், அரசமைப்பு தொடர்பான உணர்ச்சிகரமான கருத்துக்கள் ஏதேனும் பேசப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கோலாலம்பூர் காவற்படைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார். சுமார் 200 பேர் கலந்து கொண்ட இந்தப் பேரணியில் 600 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், சட்ட மீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உடனடியாகத் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








