ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.12-
வரும் சீனப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, பிப்ரவரி 15 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 6 நாள் 'ஒப்ஸ் செலாமாட் 25' நடவடிக்கையின் போது சுமார் 20 லட்சம் வாகனங்கள் பினாங்கிற்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 1.8 மில்லியனாக இருந்த வாகனங்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 2 மில்லியனாக உயரும் என்று மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்தார். நகரவாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதும், ரமலான் மாதம் நெருங்குவதும் இந்த அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.
நெடுஞ்சாலைகள், கூட்டரசு சாலைகள் மற்றும் நகரச் சாலைகளில், குறிப்பாக நெரிசல் மிகுந்த நேரங்களில்போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
தடையற்ற போக்குவரத்தை உறுதிச் செய்ய 380 போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் மற்றும் வீரர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். மேலும், குற்றத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 350 ரோந்து வாகனங்களும் இந்த நடவடிக்கையில் இணைக்கப்படும் என டத்தோ அஸிஸி மேலும் கூறினார்.
இவர்களுடன் சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே மற்றும் உள்ளூர் அதிகாரிகளும் இணைந்து செயல்படுவார்கள் என்று அவர் விளக்கினார்.








