Mar 23, 2026
Thisaigal NewsYouTube
குழந்தை சித்ரவதை: கணவன், மனைவி கைது
தற்போதைய செய்திகள்

குழந்தை சித்ரவதை: கணவன், மனைவி கைது

Share:

ஷா ஆலாம், ஆகஸ்ட்.19-

கவனித்துக் கொள்வதற்குத் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டு வயது குழந்தையைச் சித்ரவதைச் செய்ததாக நம்பப்படும் கணவனையும், மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஷா ஆலாம், செக்‌ஷன் 16 இல் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் கிடைக்கப் பெற்ற போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த தம்பதியர் கைது செய்யப்பட்டதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

தங்கள் இரண்டு வயது குழந்தையை முதல் நாள் காலை 10 மணியளவில் குழந்தை பராமரிப்பாளர்களான அந்தத் தம்பதியரிடம் ஒப்படைத்ததாகவும், அன்றிரவு, குழந்தையை வீட்டிற்குத் தூக்கி வந்த போது , முகத்தில் காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெற்றோர் போலீசில் புகார் அளித்து இருப்பதாக ஏசிபி முகமட் இக்பால் குறிப்பிட்டார்.

முகத்தில் ஏன் காயம் ஏற்பட்டுள்ளது என்று குழந்தையைக் கவனித்துக் கொண்ட பெண்ணிடம் வினவிய போது, குழந்தைகள் சண்டையிட்டுக் கொண்டதாகக் கூறியுள்ளார்.

எனினும் அந்தப் பெண்ணின் பதிலில் திருப்தியில்லாத குழந்தையின் தாயார் இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளார்.

ஷா ஆலாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தையின் முகத்தில் காயங்கள் இருப்பதை மருத்துவர்கள் உறுதிச் செய்துள்ளனர்.

குழந்தைச் சித்ரவதைச் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதால் நேற்று இரவு 11.22 மணிக்கு செக்‌ஷன் 16 இல் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 40 மற்றும் 37 வயதுடைய தம்பதியினரைப் போலீசார் கைது செய்தனர்.

அத்தம்பதியினரை விசாரணை செய்வதற்கு மூன்று நாள் தடுப்புக் காவல் அனுமதியையும் போலீசார், நீதிமன்றத்தில் பெற்றுள்ளனர் என்று ஏசிபி முகமட் இக்பால் தெரிவித்தார்.

Related News