கோலாலம்பூர், ஜூலை.12-
சுகாதாரப் பணியாளர்களின் ஷிப்டு வேலை நேரத்தை 42 மணி நேரமாகக் குறைக்கப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவு, அவர்களின் உடல், மனம், உணர்வு ரீதியான ஆரோக்கிய நிலைகளைப் பராமரிக்க உதவும் என்று பொதுச் சேவை ஊழியர்களின் தொழிற்சங்கமான கியூபெக்ஸ் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் பொதுச் சுகாதார சேவைகளின் தரம் தொடர்ந்து சிறந்த நிலையில் இருப்பதையும் இந்த முடிவு உறுதிச் செய்துள்ளது என்று கியூபெக்ஸின் தலைவர் டத்தோ டாக்டர் அட்னான் மாட் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது, அறிவார்ந்த செயலாகவும், மக்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர்களின் பரிவு, நலன் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றின் மதிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் மடானி மலேசியாவின் மனப்பான்மைக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பொதுச் சேவை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அடிப்படை முடிவுகளை எடுப்பதில் கூட்டுப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கும், குரல் கொடுப்பதற்கும் தொடர்ந்து இடம் அளித்ததற்காக அரசாங்கத்திற்கு கியூபெக்ஸ் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அட்னான் மாட் கூறினார்.








