ஜார்ஜ்டவுன், மே.03-
பினாங்கு, ஜார்ஜ்டவுன், ஜாலான் பேரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து வாகனங்கள் பல்வேறு அளவுகளில் தீயில் எரிந்து சேதமடைந்தன. அதிகாலை 4.30 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் சுமார் 40 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியதாக பினாங்கு மாநில தீயணைப்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு, தீ விபத்துக்கான காரணமும் சேத மதிப்பு குறித்தும் தீயணைப்புப் படையினரின் தடயவியல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








