ஈப்போ, நவ. 11-
தனது உறவுக்கார இளைஞரால் பல முறை தாக்கப்பட்டு, நான்கு நாட்களாக வீட்டின் அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் மாது ஒருவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் ஈப்போ, தாமான் புத்ரி லிண்டோக்கான் பிந்தாங்கில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக தனது அக்காளை காணவில்லை என்று அந்த மாதுவின் சகோதரன் தேடிக்கொண்டு இருந்த நிலையில் அந்த மாது, சம்பந்தப்பட்ட வீட்டில் பிணமாக கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ஸுல்காப்லி சரியாட் தெரிவித்தார்.
வீட்டின் படிகட்டிலிருந்து கீழே விழும் வரைக்கும் அந்த மாதுவை சம்பந்தப்பட்ட இளைஞர் தாக்கியிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஈப்போவில் பேரா மாநில போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் அந்த மாதுவின் உறவுக்கார இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபர் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஸுல்காப்லி சரியாட் மேலும் கூறினார்.








