Mar 7, 2026
Thisaigal NewsYouTube
நாட்டில் உரிமை கோரப்படாத 1300 கோடி ரிங்கிட் பணம்: கணக்காய்வுத் துறை  தகவல்
தற்போதைய செய்திகள்

நாட்டில் உரிமை கோரப்படாத 1300 கோடி ரிங்கிட் பணம்: கணக்காய்வுத் துறை தகவல்

Share:

கோலாலம்பூர், மார்ச்.07-

மலேசியாவில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி, 1300 கோடி அல்லது 13 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான பணம் உரிமை கோரப்படாமல் உள்ளதாக நாட்டின் கணக்காய்வுத் துறைத் தலைவர் டத்தோ ஸைனானி ஜூசோ தெரிவித்துள்ளார்.

இதில் 700 கோடி ரிங்கிட் ‘உரிமை கோரப்படாத அறக்கட்டளை கணக்கில்’ உள்ளது. மீதமுள்ள தொகை 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை கோரப்படாததால், ஒருங்கிணைந்த வருவாய்க் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், மக்கள் தகுந்த ஆதாரங்களுடன் விண்ணப்பித்தால், இந்தத் தொகையை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும் என்று ஸைனானி ஜூசோ விளக்கமளித்தார்.

முக்கியமாக, இந்தப் பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறிக் கொள்ளும் எந்தவொரு இடைத்தரகர்களையோ அல்லது முகவர்களையோ அரசாங்கம் நியமிக்கவில்லை என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பொதுமக்கள் தங்களின் உரிமத் தொகையை நேரடியாகவோ அல்லது eGUMIS எனும் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தின் வாயிலாகவோ மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் பேருந்து சேவை மையங்களும் தற்போது செயல்பாட்டில் உள்ளன. பொதுமக்கள் தங்களுக்குச் சேர வேண்டிய பணம் ஏதேனும் இருக்கிறதா என்பதை உடனடியாகச் சரிபார்த்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு ஸைனானி ஜூசோ கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News