ஜார்ஜ்டவுன், டிசம்பர்.28-
பினாங்கு, தஞ்சோங் தோக்கோங்கில் இன்று காலை ஒரு மாடி வீடு திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததில், உள்ளே தனியாக வசித்து வந்த 50 வயது நபர் குளியலறையில் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. காலை 9.37 மணிக்குத் தீ பரவத் தொடங்கிய நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அடர்ந்த புகைக்கு நடுவே போராடி குளியலறையில் இருந்தவரை மீட்டு, இரண்டாம் நிலை தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பினாங்கு மாநில தீயணைப்பு – மீட்புப் படை செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
சுமார் 60 விழுக்காட்டிற்கும் மேலாக வீட்டைச் சாம்பலாக்கிய இந்தக் கோரத் தீயை, பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் மற்ற வீடுகளுக்குப் பரவாமல் தடுத்து அணைத்தனர். 21 வீரர்கள் ஈடுபட்ட இந்த அதிரடி மீட்புப் பணியைத் தொடர்ந்து, தெனாகா நேஷனல் பெர்ஹாட், சுகாதார அமைச்சு, காவற்படை ஆகியோர் சம்பவ இடத்தைச் சோதனையிட்டு வரும் நிலையில், தீ விபத்துக்கான மர்மமான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.








