கோலாலம்பூர், பிப்ரவரி.25-
தொடக்கப் பள்ளிகளில் 2027-ஆம் ஆண்டுக்கான புதிய பாடத் திட்டத்தின் கீழ், கணிதப் பாடத்திற்கான மொத்த நேரத்தை 608 மணி நேரமாக உயர்த்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. இது குறித்த விவரங்கள் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது நடைமுறையில் உள்ள 576 மணி நேரக் கற்றல் கற்பித்தல் நேரம், புதிய மாற்றத்தின் மூலம் மேலும் 32 மணி நேரம் அதிகரிக்கப்பட உள்ளது. புதிய மாற்றத்திற்கு ஏற்ப நிலை ஒன்றில், ஆண்டு 1 மற்றும் ஆண்டு 2 மாணவர்களுக்கு வாரத்திற்கு 3.5 மணி நேரம் கணிதப் பாடங்கள் நடத்தப்படும்.
நிலை இரண்டில் ஆண்டு 3 மற்றும் ஆண்டு 4 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிலை மூன்றில் ஆண்டு 5 மற்றும் ஆண்டு 6 மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கணிதக் கோட்பாடுகளைச் சிறப்பாகப் புரிந்து கொள்வதற்கும், அன்றாட வாழ்வில் அவற்றைப் பயன்படுத்துவதற்கும் இந்த கூடுதல் நேரம் உதவும் என்று கல்வி அமைச்சு தனது எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்துள்ளது. மேலும், கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தவும், தகுந்த உதவிகளை வழங்கவும் இது வழிவகுக்கும் என்று அது விளக்கம் அளித்துள்ளது.








