தோல்வி பயத்தின் காரணமாகவே மலாக்கா மற்றும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒற்றுமை அரசாங்கம் தள்ளிப்போடத் திட்டமிடுவதாக பெர்சத்து கட்சித் த தலைவர் டான்ஸ்ரீ முஹிதீன் யாசின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இன்று டுங்குன் மாரா அறிவியல் கல்லூரியைத் திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட், "முன்னாள் பிரதமர் முஹிதீன், மற்றவர்களும் அவரைப் போலவே செயல்படுவார்கள் என்று நினைக்கக் கூடாது," என்று விமர்சித்தார்.
வாழ்க்கைச் செலவின உயர்வைக் கருத்தில் கொண்டு தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் என மலாக்கா ஜசெக தலைவர் கூ போய் தியோங் முன்வைத்த யோசனையைத் தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்தது. இதற்குப் பதிலளித்த ஜாஹிட் , மாநில சட்டமன்றங்களைக் கலைக்கும் அதிகாரம் அந்தந்த மாநில ஆளுநர், இடைக்கால சுல்தான் மற்றும் மாமன்னரிடமே உள்ளது என்றும், அரசாங்கம் தேர்தலைத் தள்ளிப்போடும் பேச்சுக்கே இடமில்லை என்றும் வலியுறுத்தினார்.








