சிரம்பான், ஜூலை 09-
சிரம்பான், சுங்கை காடுட் , தாமான் தூங்கு ஜாபர் பகுதியில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழாவையொட்டிய முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சீரும் சிறப்புமாக நேற்று திங்கட்கிழமை வெகு கோலாகலமாக நடைபெற்றது.
திருக்கயிலாய பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஶ்ரீ கார்யம் வாமதேவ ஶ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் ஆலோசனையுடன் அருள்மிகு பெரியநாயகி உடனாகிய இராஜராஜேஸ்வரர் ஆலய நிர்வாக சபை மற்றும் திருக்கல்யாண உபயதாரர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இத்திருக்கல்யாண நிகழ்வில் சுமார் ஆயிரம் பேர் கலந்து சிறப்பித்தனர்.
முன்னதாக, மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வாக பரிசம் போடும் நிகழ்வு கோயில் சந்நதியில் நடைபெற்றது. இரு வீட்டாரும் புடவை, வேஷ்டி, வெற்றிலைபாக்கு, தேங்காய், பழங்கள், பூக்கள், பூஜைப்பொருட்கள் முதலியவற்றை கொண்டு வந்து, சீர்வரிசை குறித்து பேசினர்..
பின்னர் திருக்கல்யாணம், ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. நறுமணம் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மேடையில் மணக்கோலத்தில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் தனித்தனியே எழுந்தருளினர்.
மேளதாள, நாதஸ்வரர் மங்கல இசை முழங்கத்துடன் திருக்கல்யாணம் நடைபெற்ற போது பக்தரகளின் பக்தி கோஷம், திருமண மண்டபத்தையே அதிரச் செய்தது.
இத்திருக்கல்யாண நிகழ்வில் அடியார் பெருமக்கள் தம்பதியர்களாகவும், திருமண வரன் ஏற்பட ஆண், பெண் இருபாலர்களாவும், மாங்கல்ய பலம் பெறவும் தொழில், வியாபாரம், அஷ்ட ஐஸ்வர்யம் போன்ற பலன்கள் கிட்டவும் இறைவனின் அருளாசியை பெற வேண்டினர். வைபவத்தின் போது பணமுடிச்சு காணிக்கையாகவும் செலுத்தப்பட்டது. விருந்து உபசரிப்புடன் திருக்கல்யாண நிகழ்வு இரவு 11 மணிக்கு நிறைவுபெற்றது..








