கோலாலம்பூர், பிப்ரவரி.11-
செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக்கிற்குச் செலுத்த வேண்டிய 66 ஆயிரம் ரிங்கிட் கடனைத் தீர்க்க, 2016-ஆம் ஆண்டு தண்ணீர் போராட்டத்தின் போது பயன்படுத்திய செருப்பு மற்றும் துண்டை ஜமால் யூனுஸ் ஏலம் விட்டுள்ளார். நெகிரி செம்பிலான் மற்றும் சபாவைச் சேர்ந்த இருவர் தலா 33 ஆயிரம் ரிங்கிட்டிற்கு இவற்றை வாங்கியுள்ளனர்.
அவதூறு வழக்கில் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகை மற்றும் நீதிமன்றச் செலவுகளுக்கான பாக்கித் தொகையைச் செலுத்த இந்த ஏலத் தொகை பயன்படுத்தப்படும் என சுங்கை பெசார் அம்னோ டிவிஷன் தலைவரான ஜமால் தெரிவித்துள்ளார்.
யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் நிதி விவகாரத்தில் தெரசா கோக் மீதான அவதூறு வழக்கில், 2022-இல் ஜமால் 3 லட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாக்கித் தொகையைச் செலுத்த இந்த விசித்திரமான ஏலத்தை ஜமால் நடத்தினார்.








