ஷா ஆலாம், செப்டம்பர்.18-
மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழக பலாப்ஸ் பயிற்சி மாணவர் ஷம்சுல் ஹரிஸ் ஷம்சுடின் மரணம் குறித்து, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் நோர்டின் கருத்து தெரிவிக்க தடை விதித்து உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை இன்று வியாழக்கிழமை ஷம்சுலின் தாயார் உம்மு ஹைமான் பீ டவுலாட்கன் பெற்றுள்ளதாக அவரது வழக்கறிஞர் டத்தோ நரன் சிங் தெரிவித்துள்ளார்.
தனது மகன் ஷம்சுல் தாக்கப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகப்படும் நிலையில், அமைச்சர் காலிட், ஷம்சுல் உடலில் காயங்கள் இல்லை என்று அறிக்கை விட்டதற்கு எதிராக, உம்மு இந்த உத்தரவைக் கோரினார்.
நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த உத்தரவின் படி, வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி வரை, காலிட்டும், தற்காப்பு அமைச்சும் இது தொடர்பாக எந்த ஓர் அறிக்கையையும் வெளியிட இயலாது என்றும் நரன் சிங் குறிப்பிட்டுள்ளார்.








