மலேசியாவிற்கு நீண்டகால அடிப்படையில் பெட்ரோல், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ரஷியாவில் நடைபெற்ற ரஷ்யா–ஆசியான் நினைவுவேந்தல் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, தனது இரு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணத்தின் நிறைவில் மலேசிய செய்தியாளர்களைச் சந்தித்த அன்வார், இந்த ஒப்பந்தம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நடைமுறையில் உள்ளதைப் போல ஆண்டுதோறும் அல்லது குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டுமே புதுப்பிக்கப்படும் ஒப்பந்தங்களைச் சார்ந்திருக்காமல், நீண்டகால எரிசக்தி வழங்கல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் மலேசிய மக்களுக்கு நாட்டின் எரிசக்தி விநியோகம் குறித்து நீண்டகால உறுதி கிடைக்கும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்தங்களைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், தான் நாடு திரும்பியவுடன், இந்த செயல்முறையை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அன்வார், ஒப்பந்த வரைவு ஏற்கனவே தயாராக உள்ளதோடு, அடிப்படைக் கொள்கைகளிலும் இரு தரப்பும் உடன்பாட்டை எட்டியுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.








