தாங்கள் பயணம் செய்த காரை வழிமறித்து , துவம்சம் செய்த யானைக்கூட்டத்தினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர், அந்த பயங்கரச் சம்பவத்திலிருந்து மீள முடியாத அளவிற்கு பீதியில் மூழ்கினர்.
இச்சம்பவம் நேற்று இரவு 7.35 மணியளவில் கிழக்குகரைக்கு செல்லும் வட மேற்கு நெடுஞ்சாலையான ஜாலான் ராயா தைமூர் பராத் டில் ஜெரிக் - ஜெலி சாலையில் 55 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
48 வயதுடைய ஆடவர், தனது குடும்பத்தைச் சேர்ந்த இருவருடன் பினாங்கிலிருந்து திரெங்கானு, ஜெர்திஹ்வை நோக்கி பெரோடுவா ஆக்சியா காரில் சென்று கொண்டிருந்த போது , சாலையோரத்தில் காணப்பட்ட யானை கூட்டத்தின் மத்தியில் குட்டி யானை ஒன்றை எதிர்பாராத விதமாக மோதி விட்டார்.
அடை மழையினால் தெளிவற்ற அந்த காட்டுப்பாதையில் நடந்த இந்த விபத்தினால் மற்ற யானைகள் அந்த பெரோடுவா ஆக்சியா காரை கால்களினால் எட்டி உதைத்து துவம்சம் செய்ய முற்பட்ட வேளையில் அந்த ஆடவர் மிக சாமார்த்தியமாக தமது குடும்ப உறுப்பினர்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இதில் அந்த ஆடவருடன் பயணம் செய்த 47 வயதுடைய அவரின் மனைவி மற்றும் 23 வயது மகன் ஆகியோர் காயம் அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








