ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர்க்கு எதிராக, எஸ்.முருகேசன் என்பவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோக்கள் தொடர்பான அவதூறு வழக்கில், ராயருக்கு 1 லட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்க முருகேசனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், வாட்ஸ்அப், டிக்டாக் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் வெளியிடப்பட்ட பல வீடியோக்கள் தொடர்பாக முருகேசன் மீது ராயர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
முருகேசன் வெளியிட்ட காணொளிகளில் உள்ள கருத்துகள் பலரது கவனத்தை ஈர்த்ததாகவும்,பல விமர்சனங்களைப் பெற்றதாகவும், இதன் மூலம் தமது நற்பெயரும் நன்மதிப்பும் களங்கப்படுத்தப்பட்டதாகவும் ராயர் குற்றம்சாட்டியிருந்தார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிதியை தான் திருடியதாகவும், மேலும் நிதியைத் திருட அல்லது தவறாக பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும் பொருள் தரும் வகையில் முருகேசனின் கருத்துக்கள் இருந்ததாக அதன் தலைவர் ஆர்எஸ்என் ராயர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 50 வயதான S முருகேசன், இழப்பீட்டுடன், 4,000 ரிங்கிட் நீதிமன்றச் செலவையும் செலுத்த வேண்டும் என்று ஜார்ஜ் டவுன் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நோர்சல்ஹா ஹம்சா உத்தரவிட்டுள்ளார்.








