காராக் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை நிகழ்ந்த கார் விபத்தில், மரணமடைந்த 3 மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவருக்கு, அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறவிருந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
அட்லி ஹக்கீம் என்ற அந்த 24 வயது மாணவர், அதே காரில் பயணித்து படுகாயமடைந்த 27 வயதான அதிரா நஜ்வா தாஜுல் ஆஷிகின்-ஐ அடுத்த ஆண்டு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாக அவரது தந்தை வழக்கறிஞர் அக்பர்தீன் அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற வழக்கறிஞரான அக்பர்தீன் அப்துல் காதர், ரோஸ்மா மான்சோரின் சூரிய மின்சக்தி திட்ட வழக்கில் அவரது சார்பில் ஆஜராகி வருபவர் ஆவார்.
இந்நிலையில், நேற்று ஷா ஆலாம், செக்ஷன் 21-இல் இருக்கும் முஸ்லிம் கல்லறையில் தமது மகனின் இறுதிச் சடங்கிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்பர்தீன், நடந்த விபத்து குறித்து தமது மூத்த மகனின் நண்பர்கள் தகவல் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அதிரா தற்போது சுயநினைவிற்குத் திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








