இம்மாதத் தொடக்கத்தில், செராஸ், பத்து 11 பகுதியில் உள்ள ஜாலான் பாலகோங்கில், நடந்த கொலை சம்பவம் தொடர்பாக மூன்று பேர் காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
38 வயதான சாய் குவான் சியோங், 41 வயதான செங் கான் லூன் மற்றும் 41 வயதான கோ கிம் யாங் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிபதி பாத்தின் டயானா ஜலில் முன்னிலையில் வாசிக்கப்பட்டபோது, அவர்கள் அதைப் புரிந்துகொண்டதாக தலையசைத்தனர்.
எனினும், கொலை வழக்குகள் உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வருவதால், அவர்களிடமிருந்து எந்த ஒப்புதல் வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த மூவரும், 38 வயதான ஓங் மெங் சியோங் என்பவரை, கடந்த மே 4-ஆம் தேதி, அதிகாலை 12.04 மணி முதல் மே 16-ஆம் தேதி இரவு 11 மணி வரையில், எந்த ஒரு நேரத்திலும், கொலை செய்திருக்கலாம் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையோ அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.








