புத்ராஜெயா, பிப்ரவரி.14-
2030-க்குள் மலேசியாவை AI தேசமாக மாற்றும் இலக்குடன், அரசாங்க கண்டுபிடிப்பு முயற்சியாக ஜி.ஐ.ஐ. (GII) திட்டத்தை இலக்கவியல் அமைச்சகம் முடுக்கிவிட்டுள்ளது. ‘Made by Malaysia’ தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை அளித்து, 'RadioConnect' மூலம் மருத்துவக் கண்டறிதலில் AI பயன்பாட்டை மேம்படுத்தி, 'Citizen Labs' வழியாக பொதுமக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அரசு திட்டமிட்டுள்ளது என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இந்த முயற்சியானது, மலேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்தின் கீழ் Futurise நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன், உள்ளூர் கண்டுபிடிப்புகளைப் பொது துறைத் தேவைகளுடன் இணைத்து, டிஜிட்டல் பொருளாதாரத்தை உலக அளவில் கொண்டு செல்ல வழிவகை செய்யும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, Futurise Sdn. Bhd. நிறுவனம் இனி மலேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்தின் கீழ் செயல்படும் என்றும், இது தேசிய ஒழுங்குமுறை சாண்ட்பாக்ஸ் ( Sandbox) மூலம் திட்டங்களை விரைவுபடுத்தும் என்றும் அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.
பொதுமக்களின் சவால்களுக்கு மலேசிய தயாரிப்பு AI தீர்வுகளை இணைப்பதன் மூலம், 2030-க்குள் ஒரு முன்னணி டிஜிட்டல் நாடாக மலேசியா உருவெடுக்கும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.








