கோத்தா கினபாலு, பிப்ரவரி.27-
டிக் டாக் சமூக ஊடகத்தின் மூலம் அறிமுகமான 15 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த திமோர் லெஸ்தே நாட்டைச் சேர்ந்த ஆடவருக்கு கோத்தா கினபாலு செஷன்ஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் இரண்டு பிரம்படிகள் விதித்தது.
30 வயதான Rafinus Bata Tukan என்ற அந்த நபர், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அந்த ஆடவருக்கும் டிக் டாக் மூலம் ஒரு மாத காலமே பழக்கம் இருந்துள்ளது. கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி, அந்தச் சிறுமி சம்பந்தப்பட்ட ஆடவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பிறகு காணாமல் போனதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார்.
இன்றைய விசாரணையின் போது குற்றத்தை ஒப்பிய அந்த ஆடவருக்கு நீதிபதி Monica Linsua, 10 ஆண்டுகள் சிறை மற்றும் 2 பிரம்படிகள் விதித்து உத்தரவிட்டார். சிறைத் தண்டனை அவர் கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து அமலுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டார்.








