பத்து காஜா, பிப்ரவரி.10-
பேரா, பத்து காஜா, கம்போங் பத்து 2, ஜாலான் தஞ்சோங் துவாலாங், Kampung Harewood, பகுதியில் வசித்த 34 வயது எஸ். சரளா தேவி, 65 வயதுடைய அவரது தாயார் ஜி. சரஸ்வதி மற்றும் சரளா தேவியின் 3 வயது மகள் எஸ். சாஸ்திகா ஆகிய மூவரும் நேற்று திங்கட்கிழமை இரவு தஞ்சோங் துவாலாங் சாலையில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த தனது ஒரே மகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டுத் திரும்பும் போது, வீட்டை அடைய இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்த நிலையில், அவர்கள் பயணம் செய்த பெரோடுவா மைவி கார் எதிரே வந்த டொயோட்டா ஹிலக்ஸ் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் சரளா தேவியும் அவரது தாயாரும் சம்பவ இடத்திலேயே நசுங்கி பலியாகினர்; படுகாயமடைந்த குழந்தை சாஸ்திகா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.
இந்த விபத்து குறித்து உயிரிழந்த சரளா தேவியின் அண்ணனும், செலாமா மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைவருமான இன்ஸ்பெக்டர் எஸ். சரவணன் கூறுகையில், "சரளா எங்கள் குடும்பத்தின் கடைசிப் பிள்ளை மற்றும் ஒரே பெண். எங்கள் தாயாருடன் நாங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தோம். தைப்பூசத்தின் போதுதான் நாங்கள் கடைசியாகச் சந்தித்துக் கொண்டோம்," என மிக உருக்கமாகத் தெரிவித்தார்.
தனது கணவர் இறந்த பிறகு, வயதான பெற்றோரைப் பராமரிப்பதற்காகவே சரளா தேவி இந்தப் பகுதியில் வசித்து வந்ததாகவும், அவர் மிகவும் பொறுப்பானவர் என்றும் அவரது அண்ணன் மற்றும் அண்டை வீட்டார் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டனர்.
விசாரணையில், இந்தத் துயரத்திற்குப் பின்னால் ஓர் அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய 27 வயது டொயோட்டா ஹிலக்ஸ் ஓட்டுநர், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து சரளா தேவியின் காரில் மோதியுள்ளார்.
அந்த ஓட்டுநரைப் பரிசோதித்ததில் அவர் 'THC' எனும் போதைப் பொருள் உட்கொண்டிருந்தது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. போதை ஆசாமியின் பொறுப்பற்ற செயலால், ஓர் அழகான குடும்பமே இன்று சிதைந்து போயிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் இறுதிச் சடங்குகள் நாளை புதன்கிழமை அவர்களின் இல்லத்தில் நடைபெறவுள்ளன.








