கோலாலம்பூர், பிப்ரவரி.07-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று சனிக்கிழமை மலேசியாவிற்கு வருகை புரியும் நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், தற்காப்பு மற்றும் செமிகண்டக்டர் உள்ளிட்ட துறைகளின் மேம்பாடு குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளது.
அதே வேளையில், இப்பேச்சுவார்த்தைகளின் மத்தியில் நாடுகடத்தப்பட்ட சர்ச்சைக்குரிய சமய போதகர் சாகிர் நாயக் விவகாரமும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு முந்தைய சந்திப்புகளில் இந்தியா சார்பில், இந்த விவகாரம் பேசப்பட்டிருந்தாலும் கூட, இம்முறை மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சின் செயலாளர் பி.குமரன் தெரிவித்துள்ளார்.
நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பேராளர்கள் குழு மலேசியாவிற்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பி.குமரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இம்முறை மலேசியாவிடமிருந்து தாங்கள் எதிர்பார்க்கும் பதில் கிடைக்கும் என்று நம்புவதாகவும் பி.குமரன் குறிப்பிட்டார்.








