சிரம்பானிலுள்ள தாமான் துவாங்கு ஜாஃபர் பகுதியில், 46 வயதுடைய பெண் ஒருவர் தனது 9 வயது வளர்ப்பு மகளை வீட்டின் பின்புறம் உள்ள சேமிப்புக் கிடங்கில் அடைத்து வைத்ததாக சந்தேகத்தின் பேரில் நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.
அச்சிறுமி அந்த குடும்பத்தால் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுக்கப்பட்டவர் என்றும், அவர் தொடர்ச்சியாக சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்ததாகவும் சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் யாத்திம் ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்திய பள்ளி விடுமுறை காலத்தில், அச்சிறுமி வீட்டின் பின்புறமுள்ள சேமிப்பு கிடங்கில் அடைத்து வைக்கப்பட்டு, அவருக்கு தினமும் இரண்டு முறை மட்டுமே உணவு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் கழிப்பறையை பயன்படுத்த மட்டும் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் சேமிப்பு அறைக்கு திரும்புமாறு கூறப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று அச்சிறுமி போலீசாரால் மீட்கப்பட்டு, துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வளர்ப்புத் தாய் மீது விசாரணை நடைபெற்று வருகின்றது.








