கோலாலம்பூர், பிப்ரவரி.13-
கோலாலம்பூர் ஜாலான் செந்தூல் சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வீடற்ற பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், கைது செய்யப்பட்ட 46 வயது நபருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதை போலீஸ் துறை உறுதிச் செய்துள்ளது.
கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் இது குறித்து கூறுகையில், சந்தேக நபர் பிப்ரவரி 10 முதல் 15-ஆம் தேதி வரை ஆறு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பிரேதப் பரிசோதனையில், மர்மமான கனமான பொருளால் தலையில் பலமாகத் தாக்கப்பட்டதே அந்தப் பெண்ணின் மரணத்திற்குத் தற்காலிகக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஒன்பது சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உயிரிழந்த பெண் 50 முதல் 60 வயது மதிக்கத்தக்கவர். அவரது அடையாளம் இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை.
கொலைக்கான காரணம் மற்றும் அந்தப் பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையிலான தொடர்பு குறித்து செந்தூல் மாவட்ட போலீசார் தொடர்ந்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர் என்று டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.








