மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதலுக்குப் பிறகு, கால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கிய 10 வயது சிறுவனின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கனத்த மழைக்கு மத்தியில் ஷா ஆலாம், பண்டார் புஞ்சாக் ஆலமில் கால்வாய் ஓரத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த கைரில் இஜானி கைசலூலினுர்டின் என்ற அச்சிறுவன், கரைபுரண்டோடிய நீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியால் அவனது நண்பர்கள் மூன்று மணி நேரம் கழித்துத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, பல்வேறு மீட்புக் குழுவினர் அந்த சிறுவனை தேடும் நடவடிக்கையைத் தொடங்கினர்.
சிறுவன் தவறி விழுந்த இடத்திலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள சுங்கை பூலோ ஆற்றில் இன்று மதியம் ஒரு 1 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார். மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








