சிரம்பான், ஜூலை.12-
கடந்த ஜுலை 7 ஆம் தேதி பண்டார் சிரம்பான் செலாத்தான் தொழிற்பேட்டைப் பகுதியில் "ஓப்ஸ் பிளாஸ்திக்" என்ற ஒருங்கிணைந்த அமலாக்க சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

என்எஸ் பிளாஸ்திக் & மெட்டல் டிரேடிங் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கையில் நெகிரி செம்பிலான் மாநில அரசின் தொழில்முனைவோர், மனித வளம், பருவநிலை மாற்றம், கூட்டுறவு, பயனீட்டாளர் ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன் தலைமையில் பல்வேறு அரசாங்க ஏஜென்சிகளைச் சேர்ந்த சுமார் 45 பேர் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரம் நடத்தப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கையில் , சம்பந்தப்பட்ட வர்த்தகத் தளத்தில் பல்வேறு அத்துமீறல்கள் நடந்துள்ளன என்பது வீரப்பன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்தனர்.

இது நெகிரி செம்பிலான் மனித வளத்துறைக்கு தொடர்பு இல்லை என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், அந்த தொழிற்சாலையில் இருந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை பெர்மிட்டைக் கொண்டு இருந்த போதிலும், அந்த வேலை பெர்மிட், சம்பந்தப்பட்ட முதலாளியின் கீழ் இல்லை என்பது குடிநுழைவுத்துறை அதிாகாரிகளின் சோதனையில் தெரிய வந்துள்ளது என்று வீரப்பன் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் அந்த 22 தொழிலாளர்களும் குடிநுழைவுத்துறையினால் கைது செய்யப்பட்டு லெங்கேங் தடுப்பு முகாமிற்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக வீரப்பன் தெரிவித்தார்.








