கோலாலம்பூர், ஆகஸ்ட் 26-
கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியாவில் நடைப்பாதை பாதாளக்குழியில் விழுந்து காணாமல் போன ஓர் இந்தியப் பிரஜையான விஜயலெட்சுமியை தேடும் பணி இன்று திங்கட்கிழமையுடன் நான்காவது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் அந்த மாதுவை கண்டு பிடிப்பதில் முழுக்க முழுக்க உள்ளூர் நிபுணத்துவம் பயன்படுத்தப்பட்டு வருவதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுல்ஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் தலைமையில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் இதற்கு பயன்படுத்தப்படும் அனைத்து தொழில்நுட்பங்களும், நிபுணத்துவமும் மலேசியாவை சேர்ந்ததாகும் என்று அவர் விளக்கினார்.
இந்த மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு, மீட்புப்படை, பொது தற்காப்பு படை, காவல் துறை, கோலாலம்பூர் மாநகர் மன்றம் மற்றும் பாதாள சாக்கடைப்பணிகளுக்கு பொறுப்பேற்றுள்ள Indah Water Konsortium ஆகியவை சம்பந்தப்பட்டுள்ளதாக சுல்ஸ்மி அஃபெண்டி குறிப்பிட்டார்.
சாக்கடை பாதாளத்தில் பயன்படுத்தப்படும் PUSH ROD மற்றும் CRAWLER ஆகிய இரண்டு அதிநவீன தொழில்நுட்ப முறைகள் இந்த மீட்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக மஸ்ஜிட் இந்தியாவில் இன்று மீட்பு நடவடிக்கையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.









