அரச மலேசிய போலீஸ் படையில் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையான JSJN, 'Op Kalidasa' மற்றும் 'Op Khas KLIA' நடவடிக்கைகள் மூலம் Selangor, Kuala Lumpur மற்றும் KLIA பகுதிகளில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் கும்பலை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
இந்த நடவடிக்கையில் சுமார் 42 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
'Op Kalidasa' நடவடிக்கையில், Ijok, Sungai Buloh மற்றும் Taman Putra Damai, Petaling Jaya பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 2 மலேசியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 409.4 கிலோ Methamphetamine மற்றும் 900 MDMA Vape திரவ cartridge-கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, 'Op Khas KLIA' நடவடிக்கையில், 9 வழக்குகளில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 260.08 கிலோ கஞ்சா மற்றும் 1.01 கிலோ Cocaine கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 21.26 மில்லியன் ரிங்கிட் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை KLIA-வில் 108 போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அனைத்து வழக்குகளும் 1952 அபாயகரமான போதைப் பொருள் சட்டம் பிரிவு 39B கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் PDRM தெரிவித்துள்ளது.
இது குறித்து JSJN இயக்குநர் Datuk Hussein Omar Khan வெளியிட்டுள்ள அறிக்கையில், KLIA அல்லது மலேசியாவின் எந்த நுழைவாயிலும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்றார்.
மேலும், PDRM, எல்லைப் பாதுகாப்பு அமலாக்க அமைப்புகள் மற்றும் Malaysia Airports Holdings Berhad ஆகியவற்றின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, போதைப்பொருள் கும்பல்களை முழுமையாக ஒழித்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.








