ஷா ஆலாம், ஜன. 18-
ஓராண்டு நிறைவு பெறுவதற்கு முன்னதாகவே தனது சேவையை நிறுத்திக்கொண்ட உள்ளூர் சிக்கன கட்டண விமான நிறுவனமான மைஏர்லைனின் இணை இயக்குநர் கோ ஹுவான் ஹுவா மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோ ஹுவான் ஹுவாவிற்கு எதிராக நடந்து வரும் சிவில் வழக்கை தொடுத்தவர்களான சுமார் 30 முதலீட்டாளர்களை உள்ளடக்கிய குழுவினர், ஷா ஆலாம், புக்கிட் ஜெலுத்தோங்கில் கோ ஹுவான் ஹுவா வசிக்கும் வீட்டின் நுழைவாயில் முன்புறம் இன்று ஒன்றுக்கூடிய நிலையில் அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கையை விடுத்துள்ளனர்.
மைஏர்லைனில் தாங்கள் 80 லட்சம் ரிங்கிட்டை முதலீடு செய்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். அந்தப் பணம் திருப்பித் தரப்படாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று அவர்கள் தங்கள் வேதனையை தெரிவித்தனர்.
முதலீட்டாளர்களில் 15 பேரை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் கூறுகையில், அந்த விமான நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக முதலீடு செய்தற்காக கோ ஹுவான் ஹுவாவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு எதிராக பேங்க் நெகாரா மலேசியா நடவடிக்கை எடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், போலீஸ்துறையோ அல்லது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமோ அந்த தொழில் அதிபருக்கு எதிராக தங்கள் விசாரணையை இன்னும் முடிக்கவில்லை. அப்படியென்றால் கோ ஹுவான் ஹுவாவிற்கு எதிராக இதுவரையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் வினவினார்.







